Get the latest updates from us for free

Sign-up for FREE weekly Newsletter.

Tuesday, May 17, 2011

தமிழகம் முழுவதும் போலீஸ் அதிகாரிகள் விரைவில் மாற்றம்; ரவுடிகளை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை


Labels:

சென்னை, மே.17-

தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா நேற்று காலையில் பொறுப்பேற்றுக் கொண்டார். உடனடியாக அதிகாரிகளும் மாற்றப்பட்டனர். புதிய தலைமை செயலாளராக தேபேந்திரநாத் சாரங்கி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக திரிபாதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்றபின்னர் கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஜெயலலிதா, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை நிலை நாட்ட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதற்கேற்ப திறமையான அதிகாரிகளை போலீஸ் துறையில் நியமிக்க அவர் முடிவு செய்தார். அதன்படி சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்ட திரிபாதி உடனடியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், பொதுமக்கள் இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்கி விழிக்கலாம். குற்றச் சம்பவங்கள் வெகுவாக குறைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். சென்னையை பொறுத்தவரை செயின் பறிப்பு, பிக்பாக்கெட், கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் கடந்த ஆட்சியில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்தன. ரவுடிகளின் அட்டகாசமும் அதிகமாக இருந்தது. கடைகளில் ரவுடிகள் மாமூல் கேட்டு மிரட்டிய சம்பவங்களும் நடைபெற்று வந்தன.

இதனை கட்டுப்படுத்த புதிய கமிஷனர் திரிபாதி போலீசாருக்கு அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். போலீஸ் நிலையங்களுக்கு வரும் புகார்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவுடிகளுக்கு எந்த சூழ்நிலையிலும் போலீசார் துணை போகக்கூடாது, குறிப்பாக அரசியல் பின்னணியில் இதுநாள்வரை ஆட்டம் போட்ட ரவுடிகளின் குற்றச் செயல்களை தூசுதட்டி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்பது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 

சென்னை மக்களை வாட்டி எடுக்கும் பிரச்சினைகளில் இன்று அதிகமாக இருப்பது போக்குவரத்து நெரிசல்தான். இதற்கு புதிய கமிஷனர் திரிபாதி முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. போலீஸ் கமிஷனரை தொடர்ந்து சென்னையில் இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் ஆகியோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.

தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை இணை கமிஷனர் பதவிகளை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. இதற்காக வெளி மாவட்டங்களில் பணிபுரியும் அதிகாரிகள் சிலர் சென்னையில் முகாமிட்டு காய் நகர்த்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். எந்த நேரத்திலும் இடமாறுதல் உத்தரவு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இவர்கள் தவிர மாவட்ட கலெக்டர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், உளவு பிரிவு உயர் போலீஸ் அதிகாரிகள் இடமாறுதல் பட்டியலில் உள்ளனர். 70-க்கும் மேற் பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

0 comments:

Confused? Feel free to ask

 

Recent comments

Recent comments

Followers

Sponsors

Recent comments

Widget by:AmazingTamilnadu

Copyright © 2011 All Rights Reserved Thesis skin by Nitin Converted into Blogger Template by TheTechFizz